Sunday, August 22, 2010

தலைநகரம்

நகரம் முறுக்குவளித்து
தெரு விளக்குகள் அணைக்கும் நேரம்.
வாசல் கதவுகளில்
தொங்கும் பையில்
வந்து விழும் ஆவின்களும்
அதனருகே நாளிதழ்களும் .
மேல்ரக நாய்கள் சில
மனிதர்களை இழுத்துக்கொண்டு
மூச்சிரைக்கும் காலை .

கடற்கரை.

எட்டிப்பார்க்கும் சூரியன்
நடனமாடும் நங்கைக் கப்பல்கள் .
காதலர்கள் கைகோர்த்தமரும் இடம்
காலையில் கழிப்பறையாய்.

மணல் முழுதும் கால்தடங்கள் .

                                  காய்ந்த பூக்கள் .
                                  உடைந்த வளையல்கள் .
                                  கிழிந்த பட்டங்கள்.
                                  எல்லாம் நினைவுகளல்ல ...

காற்று வாங்கும் படலம் விடுத்து

பேருந்துப் பயணங்கள்
பைக் சாகசங்கள்
வாகனப் பேரணிகள்.
நெரிசல்கள்
இரைச்சல்கள்
வழியிலும் மனதிலும்.
அதிகம் மனிதர்கள் .
அநேகர் தனியர்கள்.

முகவரி கேட்டு அலையும் சிலர்

முகவரியில்லா முடிவுகளில் சிலர் .

நகரத்தில் நதிகள் கூவங்களாய்.

                                     சிலர் நரம்புகளிலும் புரையோடிப்பாய்கிறது. 
நாகரிகம் வளர்கிறதாம் .?!!!
                                    பண்பாடுகளைத் தேய்த்து
                                    மொழிகளை மிதித்து
                                    மனிதம் சிதைத்து ...

மேதாவித்தனம் அதிகம்

 மேதாவிகள்
குறைவு .

வயிறுபுடைக்கத் தின்று 

பல்குத்திக் கொண்டே
சில்லறை இல்லை என்கிறான்
கையேந்தும் காரிகையிடம்.
நவீன உடை பிச்சைக்காரன்.
நகர்கிறாள் அடுத்த கடவுளிடம்...

விண்ணோக்கி கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய் .

பிம்பங்களிளெல்லாம்
குடிசைகள்
குப்பைகள்
கும்பல்களாய்...

வியர்வைகளை உறிஞ்சியெடுத்து

வெறுத்தோய்கிறது சூரியன் .
மின்னொளியில் நகரம்
இருள் மட்டும் தேடும் சிலரது அவலம் .

கண்பேசும் காதலில்

கைகளும் கால்களும்
பேசிக்கொள்ளும் .
பொதுவிடம் தனியிடம் என்பதிங்கில்லை.
சமத்துவம்.
வாகனங்கள் ஓய்வெடுக்க
நிறுத்தங்கள் நிசப்தமாகிறது.
சைகைகள் மஞ்சளாகிறது.

இரவுக்கோழிகள்

விழித்தெரிந்து பறக்கின்றன .
இன்னொரு கலாச்சாரம் புகுத்தவேண்டி.....
 
புதுமைவாதிகளல்ல .,
புலனின்ப ஜாதிகள்.

காட்சிகள் மாறிக்கொண்டே

கண்மூடி அயர்கிறது நகரம்
அனைவரையும் தோளில் சாய்த்து
அன்னையாக...

என்றும் அன்புடன்

என்ஸ்ரீவெங்கடேஷ் ...   

1 comment:

  1. நண்பா.. என்னடா ஆச்சு?... காலையில சாப்பிடலையா?.... பசி மயக்கதுல இப்படி ஆகிட்ட :((

    ReplyDelete